செல்போன் வாங்கி தராததால் மாணவன் தற்கொலை திருவட்டார் அருகே பரிதாபம்

திருவட்டார் அருகே செல்போன் வாங்கி தராததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.

Update: 2019-05-20 22:15 GMT
திருவட்டார்,

திருவட்டார் அருகே மேக்கா மண்டபம் பரவகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ். இவருடைய மனைவி சாஜினி (வயது 34). இவர்களுக்கு வர்ஷா (17) என்ற மகளும், கிஷோர் (15) என்ற மகனும் இருந்தனர். கிறிஸ்துராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். கணவர் இறந்த பிறகு, சாஜினி வேறொருவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் வசித்து வருகிறார்.

இதன் காரணமாக கிறிஸ்துராஜ் தாயான ரோஸ்மேரியின் (60) பராமரிப்பில் கிஷோரும், வர்ஷாவும் இருந்து வந்தனர். இந்த நிலையில் கிஷோர் 10-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றான். கிஷோர் பாட்டியிடம் புதிய செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளான். அதற்கு அவர் வாங்கி தருவதாக சொல்லி காலம் தாழ்த்தியுள்ளார். ஆனாலும் கிஷோர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

தற்கொலை

ஒரு கட்டத்தில் செல்போன் வாங்கி தர மாட்டேன் என்று பாட்டி தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனையுடன் இருந்த மாணவன் கிஷோர் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.

மேலும் இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்டி செல்போன் வாங்கி தராததால் மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்