நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண்ணால் பரபரப்பு

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-21 23:00 GMT
நாமக்கல்,

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், கடந்த ஒரு மாதத்திற்கு மேல் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் குறைதீர்க்கும் மனுக்கள் எதுவும் அதிகாரிகளால் பெறப்படவில்லை.

மாறாக அதற்கென உள்ள பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டு செல்கின்றனர். அந்த மனுக்களை அதிகாரிகள் மாலையில் எடுத்து, உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதர நாட்களிலும் மனுக்கள் கொடுக்க பொதுமக்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

அந்த வகையில் நேற்று நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பெரியபட்டி அருகே உள்ள கோணன்பரப்பு கிராமத்தை சேர்ந்த தனலட்சுமி (வயது42) என்பவர் தனது கணவர் சாமுவேல் மற்றும் பெண் குழந்தை, உறவினர்களுடன் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மண்எண்ணெய் பாட்டில் வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மண்எண்ணெய் பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பெண் உள்பட 5 பேரையும் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக நல்லிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து தனலட்சுமி கூறியதாவது:-

நாமக்கல் அம்மா உணவகம் அருகில் வீடு இன்றி சாலையோரம் வசித்து வந்தோம். சில மாதங்களுக்கு முன்பு கலெக்டரிடம் நாங்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, எங்களுக்கு பெரியப்பட்டி அருகே உள்ள கோணான்பரப்பு கிராமத்தில் 2 சென்ட் அளவில் அதிகாரிகள் வீட்டுமனை ஒதுக்கி கொடுத்தனர்.

தற்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் எங்களது நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

அது மட்டும் இன்றி என்னையும், எனது குடும்பத்தினரையும் தாக்கி மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்