தஞ்சை அருகே தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி சாவு கொலை வழக்கில் கணவன் கைது

தஞ்சை அருகே கணவனால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் அந்த பெண்ணின் கணவனை கைது செய்தனர்.

Update: 2019-05-22 23:00 GMT
கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை அருகே உள்ள வல்லம் மருதக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் குமார்(வயது41). மரம் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி கமலாதேவி(வயது31). குமார் தனது மனைவியுடன் மருதக்குடியில் உள்ள அவருடைய மாமியார் வீட்டில் வசித்து வந்தார். கமலாதேவிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு பெண்குழந்தை பிறந்தது. சம்பவத்தன்று கமலாதேவியின் சகோதரருக்கு செங்கிப்பட்டியில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்துக்கு குமார் சென்று வந்த பிறகு அவருடைய மனைவி கமலாதேவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் தனது குழந்தைக்கு மாமியார் வீட்டில் இருந்து நகை போடவில்லை என கூறி தகராறு செய்தார். இந்த தகராறு முற்றியதில் அருகே கிடந்த கட்டையை எடுத்து கமலாதேவியை குமார் தாக்கியதாக கூறப்படுகிறது.

கணவன் கைது

இதில் தலையில் பலத்த காயமடைந்த கமலாதேவியை அவருடைய உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தனது மகள் தாக்கப்பட்டது குறித்து கமலாதேவியின் தாய் சந்திரா (55) வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து

குமாரை தேடி வந்தனர். இந்தநிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த கமலாதேவி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து வல்லம் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். இந்தநிலையில் வல்லம் அருகே உள்ள அய்யாசாமிபட்டியில் குமார் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்