தஞ்சை அருகே கிணற்றில் மூழ்கி என்ஜினீயர் சாவு நண்பர்களுடன் குளிக்க சென்ற போது பரிதாபம்

தஞ்சை அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற போது கிணற்றில் மூழ்கி என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-05-26 23:00 GMT
கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை சீனிவாசபுரம் அருகே உள்ள திருநகரை சேர்ந்தவர் ஜபருல்லா கான். இவருடைய மகன் முகமது ஜவ்வாது கான் (வயது21). இவர் டிப்ளமோ என்ஜினீயர். இவரது தந்தை ஜபருல்லா கான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் முகமது ஜவ்வாது கான் நேற்று தனது நண்பர்கள் 8 பேருடன் வல்லம் அருகே உள்ள குருவாடிப் பட்டிக்கு சென்றார். பின்னர் குருவாடிப்பட்டி காளியம்மன் கோவில் அருகே உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளித்துள்ளார். நீச்சல் தெரியாததால் முகமது ஜவ்வாது கான் கிணற்றில் மூழ்கினார். இதை பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

பிரேத பரிசோதனை

இதகுறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசாரும், தீயணைப்பு துறை படைவீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இறங்கி தேடி முகமது ஜவ்வாது கான் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்