தாளவாடி அருகே பரபரப்பு; குடிபோதையில் மகனை அரிவாளால் வெட்டிய தந்தை

தாளவாடி அருகே குடிபோதையில் மகனை தந்தை அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-09 23:30 GMT

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே பாலப்படுகை பகுதியை சேர்ந்தவர் ஜடையன் (வயது 60). இவருடைய மகன் மாதேஸ் (41). ஜடையனின் மனைவி இறந்துவிட்டார். மாதேசின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் ஜடையனும், மாதேசும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். 2 பேரும் கூலித்தொழில் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் தந்தையும், மகனும் வீட்டில் மது அருந்திக்கொண்டு இருந்தனர். அப்போது குடிபோதையில் அவர்கள் 2 பேருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த ஜடையன் வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து மகன் மாதேசின் தலை, கழுத்து, கை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதனால் அவர் வலிதாங்க முடியால் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதனால் ஜடையன் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.

இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த மாதேசை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மைசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகனை அரிவாளால் வெட்டிய ஜடையனை வலைவீசி தேடி வருகிறார்கள். குடிபோதையில் தந்தையே மகனை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்