கொலை செய்யப்பட்ட சமூகஆர்வலர் குடும்பத்துக்கு நிவாரணம் கிராம மக்கள் கோரிக்கை

கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2019-06-10 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த விளார் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மனைவி சாந்தா. இவர்களுடைய மகன் ஆனந்தபாபு. சமூக ஆர்வலரான இவர் அந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டராகவும் பணியாற்றி வந்தார் இவர் குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டார்.

இறந்த ஆனந்தபாபுவின் தாய் சாந்தா, கிராம மக்களுடன் நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் கலெக்டர் அண்ணாதுரையிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன். மூத்த மகள் வாய்பேச முடியாதவர். 2-வது மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. 3-வது மகள் படித்து வருகிறார். இந்த நிலையில் சமூக பணிகளில் ஈடுபட்டு வந்த எனது மகன் ஆனந்தபாபு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக அவர் சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

மேலும் கிராம மக்களுக்கு புதிய ரே‌‌ஷன்கார்டு பெறுதல், பெயர் சேர்த்தல், வாக்காளர் அடையாள அட்டை பெற்றுத்தருதல் உள்பட பல்வேறு சேவைகளை செய்து வந்தார். தேர்தல் நேரத்தில் தேர்தல் விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டார். தற்போது அவர் கொலை செய்யப்பட்டு விட்டதால் எங்கள் குடும்பத்திற்கு வாழ்வாதாரமாகவும், சமுதாயத்திற்கு சேவையாளராகவும் விளங்கிய எனது மகனை இழந்து தவிக்கிறோம். என் குடும்பம் ஏழ்மையில் உள்ளது. எனவே எனது மகளுக்கு அரசு பணியும், எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு நிவாரண உதவியும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்