தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 3 வயது குழந்தையுடன் பெண் தர்ணா போலீசார் விசாரணை

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 3 வயது குழந்தையுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2019-06-10 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பள்ளத்தான்மனை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டிச்செல்வி (வயது 25). இவர் நேற்று தனது 3 வயது குழந்தையுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலக வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாண்டிச்செல்வியை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

முன்னதாக அவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘‘எனக்கும், பள்ளத்தான் மனையை சேர்ந்த ஒருவருக்கும் 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது ஊருக்கு வருவார்.

இந்த நிலையில் எனது கணவருக்கும், மரவனபத்து பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ரகசியமாக திருமணம் நடந்ததாக அறிந்தேன்.

இதையடுத்து நான் எனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் பேசவில்லை. இது குறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். அதில் எனது கணவரை மீட்டுத்தருவதோடு, அவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தேன். ஆனால் போலீசார் எனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்’’என அதில் கூறி இருந்தார்.

மேலும் செய்திகள்