மீஞ்சூர் அருகே அனல்மின்நிலைய ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

மீஞ்சூர் அருகே அனல்மின்நிலைய ஊழியர் வீட்டில் 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-06-11 22:15 GMT

மீஞ்சூர்,

மீஞ்சூர் அடுத்த நாலூர் ஏரிக்கரை பகுதியில் வசிப்பவர் சங்கர் (வயது 42). இவர் வடசென்னை அனல்மின் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தனியார் கன்டெய்னர் கம்பெனி முன்பாக சிறிய உணவகம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு சங்கர் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி உணவகத்திற்கு சென்று விட்டார். வேலை முடிந்ததும் சங்கர் வீட்டிற்கு இரவு வந்தார்.

அப்போது பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் சங்கர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்