வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி வேலைக்கு செல்லாமல் வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-06-12 23:00 GMT
நல்லூர், 

திருப்பூர் - முதலிபாளையம் பகுதியிலுள்ள சிட்கோவில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அங்கு பணிபுரியும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி லட்சுமணன் (வயது 21) என்பவர் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் காசிபாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு நண்பர்களுடன் மது அருந்த சென்றுள்ளார். அப்போது அந்த கடையில் சிட்கோ பகுதியை சேர்ந்த சிலர் மது அருந்திக்கொண்டிருந்தனர்.

அப்போது லட்சுமணனுக்கும், அங்கு மது அருந்தியவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் தகராறாக மாறியது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். அதன்பின்னர் லட்சுமணன் மட்டும் தனியாக டாஸ்மாக் கடையில் இருந்து திரும்பி வந்தபோது, ஒரு கும்பல் லட்சுமணனை தாக்கி உள்ளது. அதில் படுகாயம் அடைந்த லட்சுமணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக குமார் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லட்சுமணன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து லட்சுமணனை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பனியன் நிறுனங்களில் வேலை பார்க்கும் வட மாநிலங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று வேலைக்கு செல்லாமல் சிட்கோ நுழைவாயில் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “சிட்கோ பகுதியில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள் அடிக்கடி இது போன்ற பிரச்சினைகளை சந்திப்பதாகவும், போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் லட்சுமணனை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்” எனவும் கோரிக்கை வைத்தனர்.

அப்போது போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் “ உரிய பாதுகாப்பு வழங்குவதாகவும் லட்சுமணனை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்வதாகவும” உறுதியளித்தனர்.பின்னர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்