கோவையில், அனுமதியின்றி வாடகைக்கு இயக்கிய 15 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோவையில் அனுமதியின்றி வாடகைக்கு இயக்கிய 15 மோட்டார் சைக்கிள்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-06-12 22:15 GMT
கோவை,

கோவை மாவட்டத்தில் தனிநபர் இருசக்கர வாகனங்களில் செயலி மூலம் முன்பதிவு செய்து பொது மக்களை ஏற்றிக்கொண்டு வாடகை வாகனமாக இயக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது.

கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் கோவை சரக இணை போக்குவரத்து கமிஷனர் ஆகியோரின் உத்தரவின் பேரில், கோவை நகர வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆகியோர் போலீசாருடன் சேர்ந்து கோவை ரேஸ்கோர்ஸ் சாலை, ரெயில்நிலையம், மகளிர் பாலிடெக்னிக், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் நின்றுகொண்டு செயலி மூலம் பதிவு செய்து வாடகைக்கு இயக்கிய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மொத்தம் 15 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டுசென்று நிறுத்தப்பட்டன. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் கோர்ட்டில் அபராதம் செலுத்திய பின்னரே வாகனங்கள் விடுவிக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.இதற்கு முன்பு இதே குற்றத்திற்காக அனுமதி இன்றி இயக்கப்பட்ட 62 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய அபராத தொகை செலுத்தப்பட்ட பின்னரே விடுவிக்கப்பட்டன.

அரசு அனுமதி பெறாமல் இயக்கப்படும் இதுபோன்ற இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் ராஜாமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும் செய்திகள்