திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை
திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்.
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள குத்தம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 46).
இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்ததாரராக இருந்தார். மேலும் பூந்தமல்லி ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி செயலாளராகவும் இருந்தார்.
இவருக்கு புஷ்பலதா என்ற மனைவியும் கமலேஷ் (16), தருண் (15) என்ற 2 மகன்களும் உள்ளனர். புஷ்பலதா குத்தம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி ஆவார்.
கமலேஷ் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பும் ,தருண் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் சதீஷ்குமார் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த சதீஷ்குமார் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியில் உள்ள மாந்தோப்பில் சதீஷ்குமார் பூச்சி மருந்து குடித்து இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே பூச்சி மருந்து பாட்டில்கள் கிடந்தன.
இதை பார்த்த அந்த வழியாக மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் புல்லரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சதீஷ்குமார்உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.