3 மனைவிகளுக்கு தெரியாமல் 4–வது திருமணம் செய்ய முயன்றவர் கைது

சென்னை சாலி கிராமத்தில் 3 மனைவிகளுக்கு தெரியாமல் 4–வது திருமணம் செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-20 00:00 GMT

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் காந்தி நகரை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 47). திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வரும் உறவினர்களை வரவேற்கும் பணிக்கு பெண்களை அனுப்பி வைக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்கள் கேரளாவில் உள்ளனர்.

இந்த நிலையில் மூன்றாவதாக தேவிகா என்பவரை திருமணம் செய்து சாலிகிராமத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் தேவிகா புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில் உதவி கமி‌ஷனர் மகிமைவீரன், ராயலா நகர் இன்ஸ்பெக்டர் கவுதமன் ஆகியோர் அஜித்குமாரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்த அஜித்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 3 மனைவிகளுக்கு தெரியாமல் அந்த பெண்ணை நான்காவதாக விரைவில் திருமணம் செய்து கொள்ள அஜித்குமார் முடிவு செய்திருந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து ஏற்கனவே திருமணம் செய்ததை மறைத்து மோசடியில் ஈடுபட்டு 4–வது திருமணம் செய்ய முயன்ற அஜித்குமார் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி, அஜித்குமாரை ஜாமீனில் விடுவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்