நெல்லை அருகே நகர பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட முயற்சி

நெல்லை அருகே குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து நகர பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட முயற்சி செய்தனர்.

Update: 2019-06-25 22:45 GMT
நெல்லை,

நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே குறிச்சிகுளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து கிராம மக்கள் நாரணம்மாள்புரம் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனர். ஆனாலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த குறிச்சிகுளம் கிராம மக்கள் நேற்று காலை கிராமத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் நாரணம்மாள்புரம் நகர பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக புறப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் குறிச்சி குளத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நகர பஞ்சாயத்து அதிகாரிகளும் அங்கு வந்தனர்.

அவர்கள் உடனடியாக லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யவும், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் முற்றுகையிடும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்