மார்த்தாண்டன்துறையில் பரபரப்பு கடல் சீற்றம்; கலையரங்கம் சேதம் தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை

மார்த்தாண்டன்துறையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் கலையரங்கம் இடிந்து சேதமடைந்தது. மீனவ கிராமங்களை பாதுகாக்க தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-06-25 22:45 GMT
கொல்லங்கோடு,

மார்த்தாண்டன்துறையில் கிறிஸ்தவ ஆலயத்தின் முன்பகுதியில் மீனவர்கள் கடலுக்கு படகில் செல்ல வசதியாக அங்கு அலை தடுப்பு சுவர் அமைக்கப்படாமல் இருந்தது. கடந்த வாரம் ஏற்பட்ட அலை சீற்றத்தால், மணல் அரிப்பு ஏற்பட்டு ஆலயம் இடியும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக மணல் அரிப்பு ஏற்பட்டு ஆலயத்திற்கு முன்பக்கம் அமைக்கப்பட்டிருந்த கலையரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து சேதம் அடைந்தது. மேலும் ஆலயத்துக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் சாக்கு மூடைகளில் மணல் நிரப்பி தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.

மீனவ கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் கடல் சீற்றத்தின்போது அதிக அளவில் இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, கடல் சீற்றத்தில் இருந்து வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடிகாலனி பகுதிகளில் தமிழக அரசால் அறிவிக்கபட்ட தூண்டில் வளைவை உடனடியாக அமைத்து மீனவ கிராமங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்