திருமணமான ஓராண்டில், தூக்குப்போட்டு பெண் தற்கொலை - போலீசார் விசாரணை

தேனி அருகே திருமணமான ஓராண்டில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-07-11 22:45 GMT
தேனி,

தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுருளிபெருமாள் (வயது 31). இவருடைய மனைவி நாகலட்சுமி (21). இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று காலையில் நாகலட்சுமி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது அவருடைய உறவினர்கள், வயிற்று வலியால் நாகலட்சுமி அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் தெரிவித்ததோடு, பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். ஆனால் பிரேத பரிசோதனை செய்த பின்னரே பிணத்தை அடக்கம் செய்ய முடியும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

பின்னர் அங்கு தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ் வந்தார். அவரும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு அவர்கள் பிரேத பரிசோதனை செய்வதற்கு சம்மதித்தனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக நாகலட்சுமியின் உடல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்