பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர்,
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக பருவமழை பொய்த்ததால், அணையின் நீர்மட்டம் நாள்தோறும் படிப்படியாக குறைந்து வந்தது. இது ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு வேதனையை தந்தது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது.
இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் குந்தா, அவலாஞ்சி, மேல் பவானி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
நேற்றுமுன்தினம் மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 482 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று மாலை 4 மணி அளவில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2,150 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயரத் தொடங்கியது. அப்போது அணையின் நீர்மட்டம் 58.73 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து வினாடிக்கு பவானி ஆற்றுக்கு 200 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 5 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.