குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி திருட்டு

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-07-13 22:15 GMT
திருச்சி,

திருச்சி உறையூர் கீழசெட்டித்தெருவை சேர்ந்தவர் சிவராமன். இவருடைய மனைவி உமாவதி (வயது 59). இவர் கடந்த 10-ந் தேதி பெரியகுளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பெரியகுளம் செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தார்.

அப்போது அங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். அவர் உமாவதியிடம் நைசாக பேச்சு கொடுத்து, குடிப்பதற்கு குளிர்பானத்தை கொடுத்தார். அதை வாங்கி குடித்த சிறிதுநேரத்தில் உமாவதி மயங்கி சாய்ந்தார்.

சிறிதுநேரம் கழித்து கண் விழித்து பார்த்தபோது, அவர் கழுத்தில் அணிந்து இருந்த 8 பவுன் சங்கிலி திருட்டு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உமாவதி இதுகுறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சங்கிலியை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். சம்பவம் குறித்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்