தடுப்புக்காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது

தடுப்புக்காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2019-07-14 21:45 GMT
விழுப்புரம்,

மரக்காணம் தாலுகா கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி மனைவி சந்தோ‌‌ஷம் (வயது 43). இவர் மீது பிரம்மதேசம் பகுதியில் சாராயம் கடத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரத்திற்கு முன்பு சாராய வழக்கில் சந்தோ‌‌ஷத்தை பிரம்மதேசம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் சாராய வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் சந்தோ‌‌ஷத்தை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து சந்தோ‌‌ஷத்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் பிரம்மதேசம் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்