மகளிடம் வாங்கிய கடனை திரும்ப கேட்டபோது ஆத்திரம், கட்டையால் அடித்து மூதாட்டி கொலை - வாலிபர் கைது

மகளிடம் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டபோது மூதாட்டியை கட்டையால் அடித்து கொலை செய்த வாலிபர் கைதுசெய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-07-14 22:30 GMT
போத்தனூர்,

கோவையை அடுத்த பாலத்துறை குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மனைவி மருதம்மாள் (வயது 60), கூலி தொழிலாளி. இவர்களுக்கு ராதாமணி (33), நந்தினி (27) ஆகிய மகள்களும், ரங்கசாமி (30) என்ற மகனும் உள்ளனர். மருதம்மாளின் மூத்த மகள் ராதாமணியிடம் அதே பகுதியை சேர்ந்த மனோஜ் (30) என்பவர் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது.

ஆனால் மனோஜ் அந்த பணத்தை நீண்ட நாட்கள் ஆகியும், ராதாமணியிடம் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி உள்ளார். இதுதொடர்பாக ராதாமணி அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து காலதாமதம் செய்து வந்துள்ளார்.

இதனால் மன வேதனையடைந்த ராதாமணி இது குறித்து தனது தாய் மருதம்மாளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது மகளிடம் வாங்கிய பணத்தை திரும்ப தருமாறு மனோஜின் தாயான கிட்டம்மாளிடம் மருதம்மாள் தெரிவித்து உள்ளார். இது மனோஜுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து மனோஜ் மூதாட்டி மருதம்மாளிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அப்போது அங்கு கிடந்த ஒரு மரக்கட்டையை எடுத்து மருதம்மாளை தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த மருதம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் மனோஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதுக்கரை போலீசார் மருதம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனோஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்