அந்தியூர் அருகே பரிதாபம்; மொபட்- மோட்டார் சைக்கிள் மோதல்; மின்வாரிய ஊழியர் பலி

அந்தியூர் அருகே மொபட்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-07-16 22:15 GMT
அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 53).

இவர் பூனாச்சியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி லட்சுமி (45). இவர்களுக்கு அனுசியா, மதுமிதா என 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் இளங்கோவன் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வெள்ளித்திருப்பூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

அந்தியூர் அருகே உள்ள பட்லூர் நால்ரோடு பகுதியில் வந்தபோது, அந்த வழியாக வந்த மொபட் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்த இளங்கோவனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.

இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த இளங்கோவனை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே இளங்கோவன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த இளங்கோவனின் உடலை பார்த்து அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்