அ.தி.மு.க. சார்பில் கண்மாய்கள் தூர்வாரும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

அ.தி.மு.க. சார்பில் கண்மாய்கள் தூர்வாரும் பணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2019-07-22 23:30 GMT
தேனி,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதலின்படி, தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்மாய்கள் தூர்வார முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 4 கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கியது. அதில் பெரியகுளம் தென்கரை பாப்பையன்பட்டி கண்மாய் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயப்பிரிதா, தாசில்தார் ரத்தினமாலா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகனும், கைலாசநாதர் கோவில் பராமரிப்புக்குழு தலைவருமான வி.ப.ஜெயபிரதீப், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து, கோடாங்கிபட்டி கணக்கன்குளம் கண்மாய், தேவாரம் பெரியதேவிகுளம் கண்மாய், பாலக்கோம்பை ஊசிமலைக்கண்மாய் ஆகிய கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கியது. இந்த பணிகளை வி.ப.ஜெயபிரதீப் தொடங்கி வைத்தார். ஒரே நாளில் 4 கண்மாய்கள் தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது. இந்த கண்மாய்களில் புதர்களை அகற்றி, ஆழப்படுத்தி, கரைகள் பலப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணிகள் குறித்து வி.ப.ஜெயபிரதீப் கூறுகையில், ‘துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதல்படியும், தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத்குமார் அறிவுரையின்படியும் இந்த பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 6 கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அதன் தொடர்ச்சியாக மேலும் 9 கண்மாய்கள் தூர்வாரப்பட உள்ளன’ என்றார்.

மேலும் செய்திகள்