அச்சரப்பாக்கம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் அடித்துக்கொலை

அச்சரப்பாக்கம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2019-07-25 23:15 GMT
அச்சரப்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்தை அடுத்த இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 32). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது தந்தை வேணுகோபால் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். சகோதரி பரிமளா திருமணமாகி அதே ஊரில் கணவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். யுவராஜ் தாயுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு யுவராஜின் தாயாரும், சகோதரியும் சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள கோவிலுக்கு சென்று விட்டனர். இரவு யுவராஜ் வீட்டின் திண்ணையில் தனியாக படுத்து தூங்கியுள்ளார்.

நேற்று காலை பால் கொடுப்பவர் வந்து பார்த்தபோது யுவராஜ் இறந்து கிடப்பது தெரியவந்தது. யுவராஜின் தலையில் பின்புறம் காயம் இருந்தது. கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்