பூதப்பாண்டி அருகே தாய் இறந்த மறுநாளில் வியாபாரி தற்கொலை தூக்கில் தொங்கி உயிரை விட்ட சோகம்

பூதப்பாண்டி அருகே தாய் இறந்த மறுநாளில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-07-25 22:00 GMT
பூதப்பாண்டி,

பூதப்பாண்டி அருகே மத்தியாஸ்நகர் இந்திராநகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 50), இவர் சென்னையில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். இதற்காக தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சென்னையில் தங்கியிருந்தார். கடந்த 23-ந் தேதி அலெக்சின் தாயார் அன்னத்தாய் (80) வயது முதிர்ச்சி காரணமாக மரணம் அடைந்தார். தாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அவர் குடும்பத்துடன் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் சடங்குகள் அனைத்தும் முடிந்த பின்பு மனைவியிடம் இரவு வெகுநேரம் தாயை நினைத்து சோகத்துடன் பேசிக்கொண்டிருந்தார். அவரை உறவினர்கள் தேற்றினர். பின்னர், அலெக்ஸ் வீட்டின் அருகே உள்ள ஒரு ஓலை குடிசையில் தந்தையுடன் தூங்க சென்றார்.

தூக்கில் பிணம்

நேற்று காலையில் உறவினர்கள் அலெக்சை எழுப்ப சென்ற போது, அவர் குடிசைக்குள் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அங்கையர்கண்ணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய் இறந்த மறுநாளில் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்