கடையநல்லூரில் புதுப்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

கடையநல்லூரில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2019-07-25 21:45 GMT
கடையநல்லூர், 

மேலக்கடையநல்லூர் கீழப்பாளையம் கல்லடிநாடிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் சதீஷ். இவருடைய மனைவி கவிதா (வயது 25). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 மாதங்கள் ஆகிறது. முத்துராஜ் சதீஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கவிதா நேற்று காலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவிதாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவிதா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவிதாவுக்கு திருமணம் ஆகி 10 மாதங்களே ஆவதால் தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிபட்டியை சேர்ந்தவர் மாசிலாமணி (60). கூலி தொழிலாளி. இவருக்கு 3 மனைவிகள். இவர் சம்பவத்தன்று கோவில் கொடைக்காக மூலைக்கரைப்பட்டி பொட்டல் தெருவில் உள்ள 2-வது மனைவி சாந்தியின் வீட்டுக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் மாசிலாமணியை அவருடைய மனைவிகள் சரிவர கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாசிலாமணி நேற்று காலை மூலைக்கரைப்பட்டி- முனைஞ்சிபட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் காட்டுப்பகுதியில் விஷம் குடித்து இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாசிலாமணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்