தேனி பகுதியில் வறட்சியால் கருகிய பருத்தி செடிகள்

தேனி பகுதியில் வறட்சியால் பருத்தி செடிகள் கருகியதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

Update: 2019-07-25 22:11 GMT
தேனி,

தேனி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பருத்தி சாகுபடி நடந்தது. பருத்தி விளைச்சலை மையப்படுத்தி மாவட்டத்தில் ஏராளமான நூற்பு ஆலைகளும், பஞ்சாலைகளும் செயல்பட்டன.

தேனி நகரில் மட்டும் 100-க்கும் அதிகமான கமிஷன் கடைகள் செயல்பட்டன. நேரடியாகவும், மறைமுகமாகவும் பருத்தி விளைச்சல் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. பின்னர், பருத்திக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் படிப்படியாக அதன் சாகுபடியில் இருந்து வெளியேறினர். இதன் விளைவாக பருத்தி பஞ்சு தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏராளமான பஞ்சாலைகள், நூற்பாலைகள் மூடப்பட்டன.

மீண்டும் பருத்தி சாகுபடியை பெருக்க வேளாண்மைத்துறை அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இதனால், சில நூறு ஏக்கர் பரப்பளவில் மட்டுமே பருத்தி சாகுபடி நடந்து வந்தன.

இந்தநிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பலத்த மழை பெய்தது. இதன் எதிரொலியாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. வைகை அணை, சோத்துப்பாறை அணை, சண்முகாநதி அணை, மஞ்சளாறு அணையும் நிர்ணயிக்கப்பட்ட முழு கொள்ளளவை எட்டியது.

தென்மேற்கு பருவமழை காலத்திலேயே அணைகள் நிரம்பியதால், விவசாயிகள் பல்வேறு விதமான பயிர் சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால், வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாமல் ஏமாற்றியது. இதனால் விவசாயிகள் பலரும் தங்களின் நிலங்களை தரிசாக போட்டு வைத்திருந்தனர்.

கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழைக் காலத்தை கருத்தில் கொண்டு தேனி, கொடுவிலார்பட்டி, நாகலாபுரம், வி.சி.புரம், ஜங்கால்பட்டி, கோவிந்தநகரம், தருமாபுரி, தாடிச்சேரி, காமாட்சிபுரம் போன்ற பகுதிகளில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். பல ஆண்டுகளுக்கு பிறகு இங்கு அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு கோடை மழை பொய்த்து விட்டது. தென்மேற்கு பருவமழையும் தீவிரம் அடையவில்லை. வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. இதனால், பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் பலரும் டிராக் டர்கள், லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி பயிர் களை காப்பாற்ற முயன்றனர்.

இருப்பினும் பல்வேறு இடங்களில் கடும் வறட்சியால் பருத்தி செடிகள் முழுமையான விளைச்சல் அடையாமல் கருகி விட்டன. இதனால், விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். நீண்ட இடை வெளிக்கு பிறகு பருத்தி சாகுபடியில் ஈடுபட்ட போதிலும் வறட்சியால் அவை கருகி போனதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே, இப்பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்