வறட்சியால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு இழப்பீடு கோரி தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி ராமநாதபுரத்தில் தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-30 22:45 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மயில்வாகனம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில செயலாளர் சாமி நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் வறட்சியால் பட்டுப்போன தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், கொப்பரை கொள்முதல் விலையை கிலோ ரூ.120 என நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும், தென்னை வளர்ச்சி வாரிய அலுவலக கிளையை தமிழகத்தில் அமைக்க வேண்டும், முழு தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.52 வீதம் அரசு கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும், தென்னை மரங்களுக்கு இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முடிவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்