கரூர் அருகே சோகம் விஷ மாத்திரை தின்று தாய்-மகள் தற்கொலை

கரூர் அருகே, விஷ மாத்திரை தின்று தாய்-மகள் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2019-08-01 22:15 GMT
கரூர்,

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ராஜபாளையம் அருகே உள்ள மாக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுதா (வயது 48). இந்த தம்பதிக்கு சூர்யா (21) என்ற மகனும், காசிகா (16) என்ற மகளும் உள்ளனர்.

சூர்யா சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து 4-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வருகிறார். மகள் காசிகா திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு உருவானது.

வீட்டில் இருந்து மாயம்

இதனால் சுதா கணவரிடம் கோபித்துக் கொண்டு திருச்செங்கோட்டில் உள்ள தனது சகோதரர் கார்த்திக் வீட்டில் வசித்து வந்தார். மகள் காசிகாவையும் தன்னுடன் அழைத்து சென்றார். பலமுறை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு ராஜா மனைவியை அழைத்தபோதும் அவர் மறுத்து விட்டார். எனவே ராஜா தனியாகவே வசித்து வந்தார். உறவினர்கள் அவர்களை சேர்த்து வைக்க எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை. நேற்று முன்தினம் காலை சுதாவும், மகள் காசிகாவும் வீட்டைவிட்டு வெளியே சென்றனர். இரவு வெகுநேரம் ஆகியும் தாயும்-மகளும் வீடு திரும்பாததால் சுதாவின் சகோதரர் கார்த்திக் அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங் களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை கரூர் அருகே உள்ள திருமுக்கூடலூர் பகுதியில் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மயங்கிய நிலையில் 2 பெண்கள் கிடந்துள்ளனர். அவர்களுக்கு அருகில் விஷ மாத்திரைகளும் கிடந்தன.

விஷ மாத்திரை தின்று தற்கொலை

இதைக்கண்ட தங்கராஜ் அதிர்ச்சி அடைந்து உடனடியாக வாங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது ஒரு பெண் இறந்து கிடந்தார். மற்றொருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்துபோனார். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த இரு பெண்களும் ஏற்கனவே வீட்டைவிட்டு வெளியேறிய சுதா மற்றும் அவருடைய மகள் காசிகா என தெரியவந்தது. கணவருடன் ஏற்பட்ட தகராறினால் சுதா தனது மகள் காசிகாவுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். அதன்படி தனது சகோதரர் வீட்டில் இருந்து மகளுடன் வெளியேறிய சுதா கரூர் அருகே திருமுக்கூடலூருக்கு வந்துள்ளார். பின்னர் இருவரும் அங்குள்ள தென்னந்தோப்பில் வைத்து தென்னை மரத்துக்கு வைக்கக்கூடிய பூச்சிக்கொல்லி மாத்திரைகளை (விஷம்) பழத்தில் வைத்து சாப்பிட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே காசிகா இறந்துவிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபிறகு சுதா இறந்துள்ளார் என்பது தெரியவந்தது.

தற்கொலை சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் தாயும்-மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்