கழுகுமலையில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால்: 1 வயது ஆண் குழந்தை அடித்துக்கொலை-கள்ளக்காதலனுடன் தாய் கைது

கழுகுமலையில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 1¼ வயது ஆண் குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தாயையும், அவரது கள்ளக்காதலனையும் கைது செய்தனர்.

Update: 2019-08-05 23:15 GMT
கழுகுமலை,

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகா பழங்கோட்டை பாரத ஸ்டேட் வங்கி எதிரில் வசிப்பவர் பாக்கியம் மகன் ராஜ் (வயது 45). இவர் பழங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வடகாசி (35). இவர்களுக்கு தானேஷ் பிரபாகரன் என்ற 1¼ வயது ஆண் குழந்தை இருந்தது.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை நடு தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன் (32), பால் வியாபாரி. இவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

சாமிநாதன் மோட்டார் சைக்கிளில் பழங்கோட்டையில் உள்ள ராஜின் வீட்டுக்கு பால் ஊற்ற செல்வது வழக்கம். அப்போது அவருக்கும், வடகாசிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த ராஜ் தன்னுடைய மனைவியையும், சாமிநாதனையும் கண்டித்தார். ஆனாலும் அவர்கள் அதனை பொருட்படுத்தாமல், தங்களது கள்ளக்காதலை தொடர்ந்தனர். மேலும் வடகாசி தங்களது கள்ளக்காதலை கண்டித்தால், குழந்தை தானேஷ் பிரபாகரனை கொன்று விட்டு, சாமிநாதனுடன் சென்று விடுவேன் என கணவரை மிரட்டி வந்துள்ளார்.

இதனால் ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய குழந்தையை சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள மாமனார் செல்லையாவின் வீட்டில் விட்டிருந்தார். பின்னர் வடகாசி கள்ளக்காதலை கைவிட்டதாக கூறி கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜ் தன்னுடைய குழந்தையை பார்க்க வேண்டும். எனவே, குழந்தையை உனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வாங்கி வா என மனைவியிடம் கூறினார். பின்னர் ராஜ், கோவில்பட்டிக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் வடகாசி சங்கரன்கோவிலில் உள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டிற்கு சென்று, குழந்தை தானேஷ் பிரபாகரனை அழைத்துச்சென்றார். பின்னர் அவர் தனது வீட்டுக்கு திரும்பி செல்லாமல், கள்ளக்காதலன் சாமிநாதனுடன் சென்றார்.

இரவில் ராஜ் தனது வீட்டுக்கு சென்றபோது, அங்கு மனைவி, குழந்தை இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து தன்னுடைய மாமனார் செல்லையாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது செல்லையா தன்னுடைய மகள் வடகாசி, குழந்தையுடன் மாலையிலேயே பழங்கோட்டைக்கு புறப்பட்டு சென்றதாக கூறினார்.

இதையடுத்து ராஜ் தனது மனைவி வடகாசி குழந்தையுடன் சாமிநாதனின் வீட்டுக்கு சென்று இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தார். இதனால், நள்ளிரவில் கழுகுமலை நடு தெருவில் உள்ள சாமிநாதனின் வீட்டுக்கு அவர் புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையே, சாமிநாதன் தன்னுடைய கள்ளக்காதலியை சந்திப்பதற்காக, அதே பகுதியில் மாரியப்பன் காம்பவுண்டில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வைத்து இருந்தார். அந்த வீட்டிற்கு சாமிநாதன், வடகாசி ஆகியோர் குழந்தையுடன் சென்றனர். நள்ளிரவில் அங்கு சாமிநாதனும், வடகாசியும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அப்போது குழந்தை தானேஷ் பிரபாகரன் பசிக்காக அழுதுள்ளான். உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த குழந்தையை சாமிநாதனும், வடகாசியும் சேர்ந்து அடித்து உதைத்தனர். இதனால் குழந்தை கதறி அழுதுள்ளது.

அந்த வழியாக மனைவியை தேடிச்சென்ற ராஜ், தன்னுடைய குழந்தையின் அழுகுரலைக் கேட்டு, அந்த வீட்டுக்கு சென்றார். அந்த வீட்டின் கதவு சாத்தி வைக்கப்பட்டு இருந்ததால், கதவை திறந்து கொண்டு ராஜ் உள்ளே சென்றார். அங்கு சாமிநாதனும், வடகாசியும் சேர்ந்து குழந்தையை தாக்கியது தெரியவந்தது. உடனே ராஜ் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வருவதற்குள், வடகாசி குழந்தையை தூக்கி கொண்டு வெளியே ஓடி விட்டார். சிறிது நேரத்தில் சாமிநாதனும் இருளில் வெளியே ஓடி விட்டார்.

பின்னர் வடகாசி தனது குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்ததாக கூறி, சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்து.

இதுகுறித்து ராஜ் அளித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், கள்ளக்காதலனுடன் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாயே கள்ளக் காதலனுடன் சேர்ந்து அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சாமிநாதன், வடகாசி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்