செங்கோட்டை அருகே அரிவாள் வெட்டில் காயமடைந்த பெண் சாவு - கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

செங்கோட்டை அருகே அரிவாள் வெட்டில் காயமடைந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-08-09 22:00 GMT
செங்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நேரு காலனியை சேர்ந்தவர் மாரித்துரை (வயது 40). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பூங்கொடி (35).

பூங்கொடிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கணவன், மனைவி 2 பேரும் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே தேன்பொத்தை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரித்துரை வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பூங்கொடியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த பூங்கொடி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடினார். உடனே மாரித்துரை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

உறவினர்கள் பூங்கொடியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து செங்கோட்டை போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மாரித்துரையை கைது செய்தனர். இந்த நிலையில் பூங்கொடி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்