தேன்கனிக்கோட்டை அருகே மணல் கடத்தல் குறித்து தகவல் தெரிவித்த வாலிபருக்கு கத்திக்குத்து டிராக்டர் உரிமையாளர் கைது

தேன்கனிக்கோட்டை அருகே மணல் கடத்தல் குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்த வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக டிராக்டர் உரிமையாளர் பச்சையப்பனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-10 23:00 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா சந்தனப்பள்ளி அருகே உள்ளது குருப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 50). டிராக்டர் உரிமையாளரான இவர் அந்த பகுதியில் தொடர்ந்து மணல் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவர் சந்தனப்பள்ளி ஊராட்சி தளுசூர் கிராமம் அருகில் நரசிம்மன் என்பவருக்கு சொந்தமான நிலம் அருகில் டிராக்டரில் மணலை கடத்தி கொண்டிருந்தார். இந்த மணல் கடத்தல் குறித்து நரசிம்மன்(30) சந்தனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பச்சையப்பன், நரசிம்மனை கத்தியால் குத்தினார். மேலும் கல்லாலும் தாக்கி விட்டு அவர் தப்பி ஓடி விட்டார். இதில் காயம் அடைந்த நரசிம்மனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கத்திக்குத்து குறித்து நரசிம்மன் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமன் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் உரிமையாளர் பச்சையப்பனை கைது செய்தார்.

மேலும் செய்திகள்