சமையல் மாஸ்டரை வழிமறித்து அரிவாள் வெட்டு; பணம்,செல்போன் பறிப்பு

ராமநாதபுரத்தில் சமையல் மாஸ்டரை வழிமறித்து அரிவாளால் வெட்டி பணம் மற்றும் செல்போனை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2019-08-12 22:45 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள தெற்குத்தரவை பள்ளிவாசல் தெருவை சேர்்ந்தவர் அப்துல்சுக்கூர் (வயது49). இவர் ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சமையல் மாஸ்டராக வேலைபார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

தெற்குத்தரவை செல்லும் வழியில் உள்ள ரைஸ்மில் அருகே சென்றபோது காட்டுக்கருவேல மரங்கள் பகுதியில் இருந்து திடீரென்று வெளியில் வந்த 3 மர்ம நபர்கள் அப்துல்சுக்கூரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி உள்ளனர்.

பின்னர் அவரை அரிவாளால் வெட்டி ரூ. 1,500 மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர்.

கையில் வெட்டுப்பட்ட நிலையில் மயங்கி கிடந்த அப்துல் சுக்கூரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தெற்குத்தரவை பகுதியை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்தில் நள்ளிரவில் திரண்டு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கேணிக்கரை போலீசார் அங்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்துல்சுக்கூர் அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்