பாறையை உடைத்தபோது பரிதாபம்: கல்குவாரியில் 150 அடி உயரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பலி

கல்குவாரி பாறையை உடைத்தபோது 150 அடி உயரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-08-13 22:15 GMT
தளவாய்புரம்,

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அருகே கொல்லங்கொண்டானில் கல்குவாரி ஒன்று உள்ளது. அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அதனை குத்தகைக்கு எடுத்துள்ளார். தினமும் அங்கு பலர் பாறையை உடைக்கும் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று காலை பட்டியூர் வெங்கடாசலபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பால்சாமி (வயது54) என்பவர் பாறையை உடைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். சுமார் 300 அடி உயர மலையில் 150 அடி உயரத்தில் நின்று பாறையை உடைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

பாறையில் துவாரமிடும் கருவியை கொண்டு வேலை பார்த்த போது, திடீரென தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சேத்தூர் புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் விசாரணை மேற்கொண்டார். பால்சாமியின் உடல் பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

உயிரிழந்த தொழிலாளி பால்சாமிக்கு மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.

மேலும் செய்திகள்