சென்னை-ஆழப்புலா எக்ஸ்பிரசில், பெண்ணிடம் சில்மிஷம் - என்ஜினீயர் கைது

சென்னை-ஆழப்புலா எக்ஸ்பிரசில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-13 22:30 GMT
சேலம்,

கேரள மாநிலம் ஆழப்புலாவை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தனது தாயாருடன் சென்னையில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவர் தனது தாயாருடன் சென்னை-ஆழப்புலா எக்ஸ்பிரசில் முன்பதிவு பெட்டியில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

சேலம் அருகே ரெயில் வந்தபோது படுக்கையில் இருந்த வாலிபர் ஒருவர் இறங்கி வந்து, தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். இதைக்கேட்டு அருகில் இருந்த சகபயணிகள் அந்த வாலிபரை பிடித்து எச்சரிக்கை செய்தனர்.

மேலும் அவரை ரெயில்வே பீட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரெயில் சேலம் வந்தடைந்ததும் ரெயில்வே போலீசில் அந்த இளம்பெண் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் திருத்தணியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 30) என்பதும், எர்ணாகுளத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருவதும், இவர் வேலைக்கு பார்க்க சென்றபோது குடிபோதையில் பெண்ணிடம் தவறாக நடந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்