எலியை கொல்வதற்காக தேங்காயில் விஷம் கலந்துவிட்டு கை கழுவாமல் உணவு சாப்பிட்ட மாணவர் பரிதாப சாவு

எலியை கொல்வதற்காக தேங்காயில் விஷம் கலந்துவிட்டு கை கழுவாமல் உணவு சாப்பிட்ட மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-08-14 23:15 GMT
கோபி,

ஈரோடு மாவட்டம் கோபி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 42). தொழிலாளி. இவருடைய மகன் நந்தன் ஸ்ரீ. இவர் கோபியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். ஆறுமுகத்தின் வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்தது.

இதனால் எலிகளை கொல்வதற்காக நந்தன் ஸ்ரீ, ஒரு தேங்காயில் எலிமருந்து (விஷம்) கலந்து வீட்டில் வைத்தார். பின்னர் அவர் கைகளை நன்றாக கழுவாமல் உணவு சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் அவர் திடீரென வாந்தி எடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர், நந்தன் ஸ்ரீயை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள், நந்தன் ஸ்ரீயை பரிசோதனை செய்தபோது அவர் எலி மருந்து சாப்பிட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு நந்தன் ஸ்ரீ கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நந்தன் ஸ்ரீ பரிதாபமாக இறந்துவிட்டார். இறந்த மாணவனின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்