குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

குடிநீர் வழங்கக்கோரி செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை சுமார் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

Update: 2019-08-14 22:30 GMT
செங்கம்,

செங்கம் அருகே உள்ள தர்பார்பாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அந்த கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்கக்கோரி செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை சுமார் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

அவர்களிடம் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதேவ்ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் தர்பார்பாளையம் கிராம பொதுமக்கள் கூறுகையில், “குடிநீர் குறித்து ஊராட்சி நிர்வாகத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் புகார் கூறினால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை” என்றனர். இந்த முற்றுகை போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.

மேலும் செய்திகள்