சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசு டாக்டர்கள் சங்கம் ஆதரவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-25 23:00 GMT
சென்னை,

தமிழக அரசு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்கவேண்டும். அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் சென்னை மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையை வலம் வந்தனர். இந்தநிலையில் உண்ணாவிரதம் இருக்கும் டாக்டர்களுக்கு ஆதரவாக அரசு டாக்டர்கள் சங்கத்தினரும் நேற்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். அப்போது அரசு டாக்டர்கள் சங்கம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

ஊதிய உயர்வு உடனடியாக வழங்கவேண்டும் என வலியுறுத்தியும், அரசாணை (4டி) 2-ல் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை உயர்த்திட வலியுறுத்தியும், சேவை மருத்துவர்கள் கலந்தாய்வை நேரடியாக நடத்திட வலியுறுத்தியும், கடந்த மாதம் 8-ந்தேதி முதல் தொடர்ந்து பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். தமிழக அரசிடம் நாங்கள் நேரடியாக எங்கள் கோரிக்கை மனுக்களை அளித்திருக்கிறோம். அவர்கள் உடனடியாக எங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்