மயக்க மருந்து கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேருக்கு 10 ஆண்டு சிறை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

கம்பத்தில் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேருக்கு தேனி மகளிர் கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

Update: 2019-09-06 22:00 GMT
தேனி,

தேனி மாவட்டம், கம்பம் சுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் ஈஸ்வரன் (வயது 23). இவரும் அதே பகுதியை சேர்ந்த பிச்சைமணி மகன் பாரதி (24) என்பவரும் நண்பர்கள். ஈஸ்வரன் 13 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பழகினார். மேலும் அந்த சிறுமிக்கு பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து காதலிப்பதாக கூறி ஏமாற்றி வந்தார்.
கடந்த 2015-ம் ஆண்டு அந்த சிறுமியை ஆசைவார்த்தை கூறி ஈஸ்வரன் தனது நண்பர் பாரதி வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை வீடியோவாகவும் பதிவு செய்தார். இதற்கு நண்பர் பாரதி உடந்தையாக இருந்தார். பின்னர் பாரதியும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

பின்னர் அவர்கள் அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி, சிறுமியிடம் அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் தாய், சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரன், பாரதி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து, நீதிபதி கீதா நேற்று தீர்ப்பு கூறினார்.

அதன்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஈஸ்வரனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. பாரதிக்கு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த குற்றத்துக்காக 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு, இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து தண்டனை பெற்ற 2 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்