மானூர் அருகே தொழிலாளி கொலை: நெல்லை கோர்ட்டில் 2 பேர் சரண்

மானூர் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் நெல்லை கோர்ட்டில் நேற்று 2 பேர் சரண் அடைந்தனர்.

Update: 2019-09-12 21:30 GMT
நெல்லை, 

மானூர் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் நெல்லை கோர்ட்டில் நேற்று 2 பேர் சரண் அடைந்தனர்.

தொழிலாளி கொலை

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்குபட்டியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 65). இவர் மும்பையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். கடந்த 10-ந் தேதி சொந்த ஊருக்கு வந்தார். அன்று இரவு வீட்டுக்கு வெளியே தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தது.

இது தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேச்சிமுத்துவின் உறவினரான மற்றொரு பேச்சிமுத்துவுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம் மாறாந்தை அருகே உள்ளது. இந்த நிலத்தை ஓட்டல் தொழிலாளி பேச்சிமுத்து தனது மகன் பெயரில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது. இதன் காரணமாக பேச்சிமுத்து கொலை செய்யப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

2 பேர் கோர்ட்டில் சரண்

இந்த கொலை வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் (58), அவரது அக்காள் மகன் சுடலையாண்டி (36) ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் நெல்லை மாவட்ட 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி கடற்கரை உத்தரவிட்டார். இதையடுத்து தங்கராஜ், சுடலையாண்டி ஆகியோரை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்