வாணரப்பேட்டை பிரபல ரவுடி கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது

பிரபல ரவுடி சாணிக் குமார் கொலை வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-12 23:45 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குமார் என்கிற சாணிக்குமார்(வயது 45). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 8 வழக்குகள் உள்ளன. கடந்த 2-ந் தேதி இரவு வாணரப்பேட்டையில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவில் சாணிக்குமார் கலந்து கொண்டார்.

நள்ளிரவு மர்ம நபர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். அவர்களில் 3 பேர் முகமூடி அணிந்தபடி வந்து சாணிக்குமார் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். அந்த குண்டு அவர் மீது படாமல் கோவில் சுவரில் விழுந்து வெடித்து சிதறியது. அதில் தப்பிய அவரை அந்த கும்பல் பின்தொடர்ந்து சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.

இந்த கொலை தொடர்பாக தெற்குபகுதி போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், வீரபத்திரசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்த குமரன்(34), ரெனோ(21) உள்பட 8 பேரை கைது செய்தனர். மேலும் பலரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் சாணிக் குமார் கொலைவழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் முள்ளோடை பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த உடன் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர்.

போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதில் வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்த சுத்தி மணிகண்டன்(29), குருசுக்குப்பம் விக்கிராய்(28), குட்டிசிவா, சண்முகம் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அந்தோணி, பாம்ரவி ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்