கோட்டூரில் கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியல்

கோட்டூரில் கல்லூரி மாணவ, மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-13 22:30 GMT
உப்புக்கோட்டை,

வீரபாண்டி அருகே கோட்டூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பேராசிரியர்கள் பாடம் நடத்த வகுப்பறைக்கு சரியாக வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் கோட்டூர் பஸ் நிறுத்தம் முன்பு தேனி-குமுளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவ, மாணவிகள் கூறியதாவது:-

கல்லூரி ஆரம்பித்து 4 மாதங்கள் ஆகியும் இது வரை மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் கலந்தாய்வு செய்தது கிடையாது. கல்லூரியில் முறையான குடிநீர், கழிப்பறை வசதி இல்லை. முதலாமாண்டு, இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இன்றுவரை அடையாள அட்டை வழங்கவில்லை. பஸ் பாஸ் கொடுக்கவில்லை. கேண்டீன் வசதி இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், கல்லூரி முதல்வரிடம் ஆலோசனை நடத்தினர். பின்னர் போலீசார் திரும்பி வந்து மாணவ, மாணவிகளிடம் இன்னும் சில நாட்களில் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு கல்லூரி சிறந்த முறையில் நடைபெறும் என்று கூறினர். இதை ஏற்றுக்கொண்டு மாணவ, மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பிறகு போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும் செய்திகள்