தே.மு.தி.க. சார்பில் நாளை முப்பெரும் விழா: விஜயகாந்த் இன்று திருப்பூர் வருகை

திருப்பூரில் தே.மு.தி.க. சார்பில் நாளை முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று(சனிக் கிழமை) மாலை திருப்பூர் வருகிறார். இது தொடர்பாக தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கே.ஜி.முத்து வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2019-09-13 23:00 GMT
அனுப்பர்பாளையம், 

தே.மு.தி.க. திருப்பூர் மாவட்ட கழகம் சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சியின் 15-ம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திருப்பூர் காங்கேயம் ரோடு வேலன் ஓட்டல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தே.மு.தி.க. நிறுவன தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.

விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் திருப்பூருக்கு வருகின்றனர். அவருக்கு பெருமாநல்லுர், பாண்டியன்நகர், புதிய பஸ்நிலையம், டவுன்ஹால், பழைய பஸ் நிலையம், வேலன் ஓட்டல் ஆகிய இடங்களில் தே.மு.தி.க. மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியிலும், நாளை நடைபெறும் முப்பெரும் விழாவிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்