121 பேர் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி உவரி மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

121 பேர் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி உவரி மீனவர்கள் நேற்று 2-வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-14 21:30 GMT
திசையன்விளை,

121 பேர் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி உவரி மீனவர்கள் நேற்று 2-வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரையில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.

121 பேர் மீது வழக்கு

நெல்லை மாவட்டம் உவரியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மூலம் மீன் பிடிப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கூடங்குளம் கடலோர காவல் படையினர் உவரி கடல் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.அப்போது அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை அதிகாரிகள் புகைப்படம் எடுத்தனர். இதை கண்ட மீனவர்கள், அதிகாரிகள் மற்றும் போலீசாரை படகுடன் சிறைபிடித்து கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக 121 மீனவர்கள் மீது கூடங்குளம் கடலோர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

2-வது நாளாக வேலைநிறுத்தம்

இதை கண்டித்து உவரி மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்தனர். அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு களை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த வேலைநிறுத்தம் காரணமாக கடற்கரையில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்