சிறுமியை கடத்தி திருமணம் செய்த டிரைவர் கைது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை

சிறுமியை கடத்தி திருமணம் செய்த தண்ணீர் லாரி டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-29 23:00 GMT
ஆவடி,

ஆவடி காமராஜர் நகரில் உள்ள தனியார் குடிநீர் வினியோகிக்கும் நிறுவனத்தில் தங்கி, தண்ணீர் லாரி டிரைவராக வேலை செய்து வருபவர் ராஜதுரை(வயது 24). இவரது சொந்த ஊர், திருவண்ணாமலை மாவட்டம் மேல்திருவடந்தனூர் ஆகும்.

திருநின்றவூர் பகுதியில் லாரியில் சென்று குடிநீர் வினியோகம் செய்தபோது ராஜ துரைக்கு, 10-ம் வகுப்பு படித்துவரும் 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. 4 மாதமாக சிறுமியுடன் பழகி வந்தார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் இருவரையும் கண்டித்தனர்.

இந்தநிலையில் கடந்த 26-ந்தேதி வீட்டில் இருந்து சிறுமி மாயமானார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ராணி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

அதில் ராஜ துரைதான், சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி தனது சொந்த ஊருக்கு கடத்திச்சென்று திருமணம் செய்து, தனியாக குடித்தனம் நடத்தி வருவது தெரிந்தது.

இதையடுத்து ஆவடி அனைத்து மகளிர் போலீசார் மேல்திருவடந்தனூர் சென்று ராஜதுரையை கைது செய்து, போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில் அவர், சிறுமியை ஏமாற்றி கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டது தெரிந்தது. இதையடுத்து ராஜதுரை மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்