பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதல்: அரசு கல்லூரி பேராசிரியை பலி - கணவர் கண் எதிரே பரிதாபம்

பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் கணவர் கண் எதிரே அரசு கல்லூரி பேராசிரியை பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-09-29 22:30 GMT
உத்தமபாளையம், 

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டி கோசந்திர ஓடை பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 35). இவர், தேனியில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி நளாயினி (34). இவர்கள், கல்லூரியில் படிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

நளாயினி, வீரபாண்டி அருகே தப்புக்குண்டு சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு 8 வயதில் மகனும் 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கேரள மாநிலம் மூணாறில் உள்ள ஒரு பள்ளியில் இவர்களது மகன் படித்து வருகிறான்.

நேற்று மகனை பார்ப்பதற்காக, க.புதுப்பட்டியில் இருந்து மணிவண்ணன் தனது மனைவி மற்றும் மகளுடன் போடி வழியாக மூணாறுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கு மகனை பார்த்து விட்டு அவர்கள் மோட்டார்சைக்கிளில் ஊர் திரும்பினார்கள். கோம்பை-உத்தமபாளையம் சாலையில் மோட்டார் சைக் கிள் சென்று கொண்டிருந்தது.

கோம்பை அண்ணாசிலை அருகே வந்த போது உத்தமபாளையம் நோக்கி முன்னால் சென்று கொண்டு இருந்த அரசு பஸ்சை மணிவண்ணன் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து நளாயினி கீழே விழுந்தார். இதில் பலத்தகாயம் அடைந்த அவர் தனது கணவர் கண் எதிரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மணிவண்ணனும் அவரது மகளும் காயம் இன்றி உயிர் தப்பினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோம்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனுஷ்கோடி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் நளாயினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்