மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு - 1,624 பேர் எழுதினர்

மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் வகையில் திறனாய்வு தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 1624 பேர் எழுதினர்.

Update: 2019-09-29 22:15 GMT
கடலூர், 

தமிழகத்தில் ஊரகப் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு அரசால் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 8-ம் வகுப்பு இறுதி தேர்வில் மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் குடும்பத்தின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் இத்தேர்வை எழுத அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதன்படி இந்த கல்வி ஆண்டுக்கான திறனாய்வு தேர்வு நேற்று நடைபெற்றது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில்(2018-19) 8-ம் வகுப்பு படித்து முடித்து, தற்போது 9-ம் வகுப்பு படித்து வருபவர்களில் 2,016 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்காக கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுதுவதற்காக காலையில் மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்தனர். பின்னர் தகவல் பலகையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறையை பார்த்து தெரிந்துகொண்டனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்வை மாவட்டம் முழுவதிலும் 1,624 மாணவ-மாணவிகள் எழுதினர். 392 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் பிளஸ்-2 முடிக்கும் வரை ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் அரசு உதவித்தொகை வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்