உத்தமபாளையம் அருகே, விவசாயி வீட்டில் செல்போன் திருட்டு - மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி

உத்தமபாளையம் அருகே விவசாயி வீட்டில் செல்போன் திருடிய கொள்ளையர்கள் மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-30 22:45 GMT
உத்தமபாளையம்,

உத்தமபாளையம் அருகே உள்ள உ.அம்மாபட்டி முத்துசாமிபுரத்தை சேர்ந்தவர் ராமைய்யா (வயது 55). விவசாயி. நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த செல்போனை திருடினர்.

பின்னர் அவர்கள் அருகே உள்ள உ.அம்மாபட்டி மந்தைக்குளத்தை சேர்ந்த மின் வாரிய ஊழியரான அழகுராஜா (44) வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். இதை வீட்டில் இருந்தவர்கள் அறிந்து திருடன், திருடன் என கூச்சல் போட்டு உள்ளனர். உடனே அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

மேலும் அந்த கொள்ளையர்கள் அதே பகுதியை சேர்ந்த விஜயா (46) என்பவரின் வீட்டிலும் கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது வீட்டில் உள்ளவர்கள் விழித்துக்கொண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து ராமைய்யா உள்பட 3 பேரும் உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர்ஜெயபாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொள்ளை முயற்சி நடந்த வீடுகளுக்கு அருகில் உள்ள வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 4 கொள்ளையர்கள் முகத்தை மறைத்தவாறு கைகளில் கடப்பாரை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்