மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த மதுரை தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த மதுரை தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-;

Update:2019-10-04 04:00 IST
தேனி,

மதுரை மாவட்டம், திருப்பாலையை சேர்ந்தவர் மலைச்சாமி. இவருடைய மகன் பாலன் (வயது 23). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் பிளஸ்-2 படித்து வந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றார்.

பின்னர் அந்த சிறுமியை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு கொண்டு சென்றார். அங்கு அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் தரப்பில் மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர். பலாத்கார சம்பவம் நடந்தது ஆண்டிப்பட்டியில் என்பதால் இந்த வழக்கு ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜரானார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கீதா நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் பாலனுக்கு சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு அரசு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து பாலனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்