‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான டாக்டர் வெங்கடேசன் உள்பட 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி - மாணவர் இர்பான் தேனி கோர்ட்டில் ஆஜர்

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர் வெங்கடேசன் உள்பட 2 பேரின் ஜாமீன் மனுக்கள் தேனி கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் மாணவர் இர்பானை போலீசார் நேற்று தேனி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Update: 2019-10-09 23:00 GMT
தேனி,

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மகன் உதித்சூர்யா (வயது 20). இவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தார். இதுகுறித்து தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் கடந்த மாதம் 26-ந்தேதி கைது செய்தனர். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களை தொடர்ந்து சென்னை மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ், வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பானின் தந்தை முகமது ஷபி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து இர்பானை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 1-ந்தேதி சேலம் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இர்பான் சரண் அடைந்தார். பின்னர் அவர் சேலம் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

கைதான டாக்டர் வெங்கடேசனுக்கு ஜாமீன் கேட்டு வக்கீல் முத்துச்செல்வம் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். முகமது ஷபிக்கு ஜாமீன் கேட்டு வக்கீல் காஜாமைதீன் மனு தாக்கல் செய்தார்.

இந்த இரு மனுக்களும் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுக்களை மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் விசாரித்தார்.

அப்போது டாக்டர் வெங்கடேசனுக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளதாலும், இந்த வழக்கில் அவரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு விட்டதாலும் அவருடைய உடல் நலன் கருதி ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார். அரசு தரப்பில் ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் மாணவர் உதித்சூர்யாவின் ஜாமீன் மனு தொடர்பான விசாரணை மதுரை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. அங்கு இன்னும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. இதை சுட்டிக் காட்டிய மாஜிஸ்திரேட்டு, ஐகோர்ட்டிலேயே இந்த வழக்கில் தொடர்புடையவருக்கு இன்னும் ஜாமீன் வழங்கப்படாத நிலையில், இந்த கோர்ட்டில் டாக்டர் வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதே அடிப்படையில், முகமது ஷபியின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதற்கிடையே இந்த வழக் கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ் ஆகியோருக் கும் ஜாமீன் கேட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுக்கள் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று (வியாழக் கிழமை) விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே மாணவர் இர்பானை சேலம் சிறையில் இருந்து, தேனி மாவட்ட சிறைக்கு மாற்ற போலீசார் முடிவு செய்தனர். இதற்காக இர்பானை சேலம் போலீசார் ஆண்டிப்பட்டி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு நேற்று காலை அழைத்து வந்தனர். அவரை மாஜிஸ்திரேட்டு மகேந்திரவர்மா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

க.விலக்கு போலீஸ் நிலையத்தில் முதலில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு, தேனி கோர்ட்டில் நடந்து வருவதால், இர்பானை தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

பின்னர் அவரை தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு போலீசார் அழைத்து வந்தனர். மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 15-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். காவல் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து இர்பானை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

முன்னதாக ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்த சேலத்தில் இருந்து இர்பானை துப்பாக்கி ஏந்திய போலீசார் பஸ்சில் அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்