வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2019-10-10 22:45 GMT
தேனி,

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, 31-12-2019 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் 5 ஆண்டுக்கும் மேலாக வேலைக்காக காத்திருப்போருக்கு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தற்போது இத்திட்டத்தின்படி காலாண்டு ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாத கல்வித்தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.600, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.900, பிளஸ்-2 தேர்ச்சியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,200, பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,800 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு செய்திருத்திலே போதுமானது. மாற்றுத்திறனாளி மனுதாரர்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியை மற்றும் அதற்கு கீழான தகுதி வரை பதிவு செய்தவர்களுக்கு காலாண்டு ஒன்றுக்கு ரூ.1,800, மேல்நிலைக்கல்வி தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.2,250, பட்டதாரிகள் எனில் ரூ.3 ஆயிரம் வீதம் 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற, விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் குடும்ப ஆண்டு வருமானத்துக்கு உச்ச வரம்பு கிடையாது. பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் இந்த உதவித் தொகை பெற முடியாது.

இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதிகள் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் அனைத்து கல்விச் சான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்