காமநாயக்கன்பாளையம் அருகே கார்கள் மோதல்; பெண் பலி

காமநாயக்கன்பாளையம் அருகே கார்கள் மோதி கொண்டன. இந்த விபத்தில் பெண் ஒருவர் பலியானார். 8 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-10-12 22:30 GMT
காமநாயக்கன்பாளையம்,

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஏரிபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 50). மரக்கடை வைத்து உள்ளார். இவருடைய மனைவி ரேணுகாதேவி(45). இவர்களது மகன் சுபாஷ்(24). இந்த நிலையில் ரேணுகாதேவி தனது மகன் சுபாசுடன்(24) பல்லடத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் நேற்று அதிகாலை காரில் உடுமலைக்கு புறப்பட்டனர். காரை செல்வகுமார்(25) என்பவர் ஓட்டினார். அந்த கார் காமநாயக்கன்பாளையம் அருகே வாவிபாளையம் பி.ஏ.பி.வாய்க்கால் அருகே அதிகாலை 5.30 மணியளவில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதியது. இதில் ரேணுகாதேவி வந்த கார் நொறுங்கியது. 2 கார்களில் இருந்தவர்களும் அலறினார்கள். விபத்தை பார்த்து அந்த வழியாக வந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கார் நொறுங்கியதால் ரேணுகாதேவி உள்ளிட்ட 3 பேரையும் மீட்க முடியவில்லை.

இது குறித்து தகவல் அறிந்ததும் காமநாயக்கன்பாளையம் போலீசாரும், பல்லடம் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காருக்குள் சிக்கிய ரேணுகாதேவி, சுபாஷ், டிரைவர் செல்வக்குமார் ஆகிய 3 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ரேணுகாதேவி பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த அவரது மகன் சுபாஷ், டிரைவர் செல்வகுமார் ஆகிய இருவரும் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றொரு காரில் வந்தவர்கள் உடுமலையை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் பார்த்தசாரதி(47), அவரது தாய் சாவித்திரி(65), மனைவி அய்யம்மாள்(45) உள்பட 6 பேர் ஆவார்கள். காரை பார்த்தசாரதியே ஓட்டி வந்து உள்ளார். இவர்கள் உடுமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் வழியில் விபத்தில் சிக்கி கொண்டனர். இவர்கள் 6 பேருக்கும் லேசான காயம் ஏற்பட் டது. அவர்களும் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்